வித்தியா படுகொலை – ஒரு சர்வதேச சதி

645 0

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் படுகொலை சம்பவமானது ஒரு சர்வதேச சதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சட்டமா அதிபர் இதனை இன்று மன்றில் தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை மன்று அடிப்படையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே பிரதி சட்டமா அதிபர் இதனை குறிப்பிட்டார்.

வித்தியா படுகொலை சம்பவமானது நாட்டின் நற்பெயரை கொடுக்கும் பொருட்டு தீட்டப்பட்ட சதித்திட்டமாகும்.

தெற்காசிய நாடுகளில் ஒரு வயது குறைந்த அழகிய பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்வதும் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கும் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் மன்றில் குறிப்பிட்டார்.

அந்த சதித்திட்டத்திலே வித்தியா சிக்குண்டுள்ளார்.

அந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் ஒன்பது சந்தேகத்திற்குரியவர்களுல் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேக ஆட்களே வன்புணர்வை புரிந்தாகவும் அவர்களில் ஐந்தாவது மற்றும் ஆறாவது சந்தேக ஆட்களே அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அந்த காணொளி தொகுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

இது தீவகத்திற்கு மாத்திரமல்ல, ஒட்டு மொத்த இலங்கையை பாதித்த சம்பவம் எனவும், இது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சம்பவம் எனவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பு ஒரு சாதாரண மக்களுக்கும் ஒரு செய்தியை தெரிவிப்பதாக இருக்க வேண்டும் எனவும் பிரதி சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து வித்தியாவின் தாயார் சாட்சியம் அளித்தார்.

இதனிடையே, வித்தியாவின் வழக்கு பொருட்களையும் அவர் அடையாளம் காட்டினார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் ஐந்தாவது சாட்சி, அரசதரப்பு சாட்சியாக நாளை வாக்கு மூலம் வழங்க உள்ளார்.

சம்பவம் தொர்பில் சந்தேகத்திற்குரியவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை அந்த சாட்சி குறிப்பிட்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி 18 வயதான சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பில் 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக கடத்தல், கொலை, குழு பாலியல் வன்முறை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment