வடக்கு மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை -பாக்கியசோதி

316 0

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம் யுத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்  மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.வடக்கு, கிழக்கு மக்கள் இதனையே விரும்புவதாக நல்லிணக்க செயலணியின் செயலாளரும், மாற்று கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான  கலாநிதி பாக்கியசோதி  சரவணமுத்து தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்கவினால் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு ஒன்று  கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டது.

இந்த செயலணியினர் யுத்த பாதிப்புக்களில் இருந்து இன்றுவரை மீளமுடியாது பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்துவரும் வடக்கு, கிழக்கு மக்களிடம் அவர்களின்  பாதிப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை விரும்புவதாக பாதிக்கப்பட்ட மக்கள்,செயலணியினரிடம் நேரடியாக தெரிவித்திருப்பதாக  பாக்கியசோதி  சரவணமுத்து  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த செயலணியின் மக்கள் கருத்தறியும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தமது செயற்பாட்டை நிறைவுசெய்துள்ளனர்.

செயலணியினரால் வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்ட மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள் அறிக்கையாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மாவட்ட ரீதியாக இந்த செயலணிக்குள் தெரிவுசெயப்பட்ட ஆறுபேரினால் தமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் செயற்பாடு தொடர்பான அறிக்கை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என  முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த செயலணியன் மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.