மன்னார், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் இன்று விளக்கமறியலில்…. (காணொளி)

239 0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாலை தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் யூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா கூடங்குளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரூம் என 6 மீனவர்கள் படகு ஒன்றில் நேற்று சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் ரோந்து கடமையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் நேற்று மாலை 3.00 மணியளவில் 6 பேரையும் கைதுசெய்து, இரவு 10.00 மணியளவில் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் இந்திய மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய நிலையில், இன்று மதியம் 1.15 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் வருகை தந்து மீனவர்களை பார்வையிட்டதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில், மீனவர்களை இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ, மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தியா கூடங்குளத்தைச் சேர்ந்த சுயம்பு உத்திரபாண்டி, மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த தங்கராஜ் பால்ராஜ், உடையார் பாலமுருகன், சுந்தரம் ராஜூ, மலைராசா நாகநாதன், குருசாமி முருகன் ஆகிய 6 இந்திய மீனவர்களுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment