இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் வீதியை புனரமையுங்கள்! மக்கள் கோரிக்கை

304 0
மிக மோசமான இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசமான  முல்லைத்தீவு   கரைதுறைபற்றின் மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியினைப் புனரமைத்து பஸ் சேவைகளை நடாத்துமாறு மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதிப் போர் காலத்தில் தமது கிராமங்களிலே பெருமளவு மக்கள் வருகை தந்து மீளவும் தமது கிராமங்களுக்குச் சென்ற நிலையில் போர் எச்சங்கள் தமது கிராமங்களில் இருந்து அகற்றப்படவில்லை. கடந்த ஏழாண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் கரைதுறைபற்று பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தங்களுடைய கிராமங்களுக்கு பஸ் சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதற்கு முதன்மை வீதி புனரமைக்கப்படாமையே காரணமாகக் கூறப்பட்டது.
இதன் காரணமாக பத்து கிலோமீற்றரில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனை, புதுக்குடியிருப்பு நகரம் என்பவற்றிற்குச் செல்வதிலும் இருபது கிலோமீற்றரில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனை, மாவட்டச் செயலகம், கரைதுறைபற்று பிரதேச செயலகம் என்பவற்றிற்குச் செல்வதில் நாள்தோறும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கும் மக்கள்
தேர்தல் காலங்களில் தமது கிராமத்திற்கு பேரூந்துகளை அனுப்பும் அரசியல்வாதிகள் கடந்த ஏழாண்டுகளாக தமது கிராமத்திற்கு பஸ்கள் வருவதில்லை என்ற தகவல் தெரிந்தும் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. உயர்தர வகுப்புகளுக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த விடயங்கள்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்படி கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.
முதன்மை வீதியினைப் புனரமைத்து   பேரூந்து  சேவையினை நடாத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராமங்களின்  மக்களின் கோரிக்கை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூடடத்தில் முன் வைக்கப்பட்டது.

Leave a comment