காணாமல் போனோர் அலுவலகம் நிறுவுவதனை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். மனிதாபிமான அடிப்படையில் பாருங்கள் என மீள்குடியேற்றம், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
காணாமல்போனவர்கள் விடயத்திற்கு தீர்வளிக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் நிச்சயம் முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்(தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக யுத்தத்தின் போது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கோரும் உறவினர்களுக்கு பதிலளிப்பதே நோக்கமாகும். தம்முடைய உறவுகளை இழந்து வாழும் மக்கள் காணாமல் போனவர்களைத் கண்டுபிடித்து தருமாறு கோருவதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை நாம் நிராகரிக்க முடியாது.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கிடையிலான பிளவுகள் ஏற்படாது இந்த நாட்டில் ஐக்கியமாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்த வேண்டும். நல்லிணக்க சூழல் உருவாகுவதற்கான நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தினை கைவிடமுடியாது. எமது அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது. தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தற்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினை தாபிக்கும் சட்டமூலத்தினை தற்போது திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்மூலம் அந்த உறவுகளுக்கு நிச்சயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ஆகவே காணாமலாக்கப்பட்ட அலுவலகத்தினை தாபிப்பதற்கான சட்டமூல விடயத்தை எவரும் அரசியலாக்க கூடாது. இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியின் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அவ்வாறான நிலையில் இந்த அலுவலகத்தின் ஊடாக மன ரீதியாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வுகள் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகின்றோம். இந்த விடயத்தில் நாம் நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்.
தற்போது வடக்கில் காணாமல்போன வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண் டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகள் இந்த பொறிமுறையூடாக நிறை வேறும். மேலும் அரசாங்கம் தமிழ் மக் களை ஒருபோதும் கைவிடாது என்றார்.