வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாட்டை என்னிடம் தெரிவித்ததும் நான் முதலமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
தற்போது வடக்கில் என்ன நடக்கி
ன்றது என்று நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையிட்டு வருகின்றேன். சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு ஜனாதிபதி என்னை பணித்துள்ளார் என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தற்போதைய நிலை என்னவென்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவ்வப்போது அறிக்கையிட்டு வருகின்றேன். ஜனாதிபதிக்கு இது தொடர்பில் முழுமையான தகவல்களையும் வழங்குவது என்னுடைய பொறுப்பாகும்.
இதேவேளை வட மாகாண சபை நெருக்கடி விவகாரத்தில் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார். அந்தவகையில் நான் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவேன்.
கேள்வி : பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கேட்டுள்ளீர்களா?
பதில்: இதுவரை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரவில்லை. விரைவில் அந்த கோரிக்கையை விடுப்பேன்.
கேள்வி : இதில் ஏன் தாமதம்?
பதில் : வட மாகாண சபையில் 38 உறுப்பினர்கள் உள்ளனர். வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாட்டை என்னிடம் தெரிவித்ததும் நான் முதலமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவேன். இதுவரை என்னிடம் 38 பேரும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. சில உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் சிலர் கொழும்பில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரும் தமது நிலைப்பாட்டை அறிவித்ததும் தேவையான நடவடிக்கைகளை சட்டத்தின் பிரகாரம் முன்னெடுப்பேன்.
கேள்வி : இதுவரை எத்தனை உறுப்பினர்கள் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர் என்று கூற முடியுமா?
பதில் : அதனை தற்போது நான் கூறுவது பொருத்தமானதாக அமையாது. அவ்வாறு நான் கூறிவிட்டால் அது இதற்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்களுக்கு தாக்கம் செலுத் துவதாக அமையும். குறிப்பிட்ட சிலர் முதலமைச்சருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் தமது நிலைப்பாட்டை அறிவித் துள்ளனர். அதனை மட்டுமே என்னால் கூற முடியும் என்றார்.