கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படாமல் வீதியோரங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கான பணிகளை தற்காலிகமாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
குப்பை முகாமைத்துவத்துக்கான தனியானதொரு பொறுப்பதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் மக்களும் தமது பொறுப்புணர்ந்து குப்பைகளை வகைப்பிரித்து சேகரித்தால் மாத்திரமே நாட்டில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குப்பையற்ற யுகத்தை உருவாக்குவோம் எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள இசுறுபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்திற்குள்ளானதில் இருந்து நாட்டில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கானதொரு இடத்தினை சில நகர சபைகள் வழங்காமையும், வழங்கப்பட்ட இடங்களில் குப்பைகளை போடுவதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடுவதும், சேகரிக்கும் குப்பைகளை வகை பிரித்து வழங்காமையினாலுமே நகர்ப்பகுதிகளில் பாரியளவில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
எமது அமைச்சுக்கு குப்பை முகாமைத்துவம் தொடர்பில் பொறுப்பு இல்லை எனினும் அதனால் அதிக பாதிப்பு எமக்கே ஏற்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்துக்கான முழு பொறுப்பை மாநகர சபை மற்றும் பிரதேசபையே ஏற்க வேண்டும். ஏனெனில் கொழும்பு நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீதொட்ட முல்லயில் கொட்டுவதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இருப்பினும் குப்பைகள் கொட்டுவதற்கான அனுமதியினை பின்னர் வழங்கியிருந்தார்கள்.
இதனை வியாபார நோக்கில் முன்னெடுத்திருந்தனர். கொழும்பு நகர குப்பை மாத்திரம் கொட்டப்படவில்லை. ஏனைய புறநகர் பகுதிகளில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு 8000 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு 2000 ரூபா செலவில் அங்கு கொட்டப்பட்டன. இதனால் 1500 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஏக்கர் நிலம் வீணடிக்கப்பட்டது.
கடந்த காலத்தை போல் அல்லாது சுற்றாடல்,மக்களின் சுகாதாரம், நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றை கருத்திற் கொண்டு சமூக பொறுப்புடனானதொரு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சேகரிக்கப்படும் குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்கு நிரந்தர தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.
அதற்கானதொரு சட்ட திட்டம் தற்போது வரையில் எமது நாட்டில் இல்லை, அதனை பொறுப்பேற்பது யாருடைய பொறுப்பு ? மாகாண சபையினுடையதா அல்லது பிரதேச சபையினுடையதா? என்ற பிரச்சினை இருக்கின்றதென்பதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன் இதற்கான தீர்வாக குப்பை முகாமைத்துவத்திற்கான தனியானதொரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
தற்போது நகர் புறங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு இராணுவத்தினரையும் சுற்றாடல் அதிகாரிகளையும் கொண்டு தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கவுள்ளது. மக்களும் தமது பொறுப்புணர்ந்து குப்பைகளை வகைப் பிரித்து சேகரிக்க வேண்டும் என்றார்.