மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, தமிழ் மக்கள் பேரவையால் இன்றையதினம் கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் கர்த்தாலால் யாழ்.நகரில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை, யாழ்.நகரில் தேனீர் கடை மற்றும் மருந்துக் கடை தவிர்ந்த ஏனைய அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு தமிழ் மக்கள் பேரவையினால் விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு பொது மக்கள் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இன்றையதினம் கர்த்தால் அனுஸ்டிக்கப்படும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
கர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் சங்கம், வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.