சாகல, விஜேதாச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

300 0

ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்குத் துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசிய அமைப்பின் தலைவருமான சதுர சேனாரத்ன இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு விரிவான நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாக வாக்களித்தே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆனாலும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அதற்கான காரணம் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இருவரும் ஊழல், மோசடிகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுகின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான 82 வழக்குகள் இதுவரை ஒழுங்கான முறையில் விசாரணை நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு, சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக குறித்த ஊழல், மோசடிகளில் தொடர்புடையவர்களைப் பாதுகாப்பதில் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ச இருவரும் செயற்படுகின்றனர்.

எனவே அவர்கள் இருவரும் வகிக்கும் அமைச்சுப் பதவிகளிலிருந்து இருவரையும் பதவி நீக்க வேண்டும். இதனை நான் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புகளும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரித நடவடிக்கையொன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கின்றேன், என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.