“எனது சவாரி – எனது குரல்”: பெண்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் Ride Colombo 2026

13 0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “Ride Colombo 2026” எனும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சைக்கிள் சவாரி, எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடல் (Galle Face Green) பகுதியில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் முன்னணி பெண்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகின்றது. பெண்களின் ஒற்றுமை, வலிமை மற்றும் சமூக மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

“எனது சவாரி – எனது குரல்; மாற்றத்திற்கான மாதிரி”

இவ்வாண்டின் தைரியமான மற்றும் ஊக்கமூட்டும் கோஷமாக “ எனது    சவாரி –  எனது    குரல் ; மாற்றத்திற்கான மாதிரி”  அமைந்துள்ளது. இந்த கோஷம் ஒரு சாதாரண விளம்பர வாசகம் அல்ல; அது ஆழமான சமூக இயக்கத்தை பிரதிபலிப்பதாக அமைகின்றது என கொழும்பு சினமன் லைவ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“Ride Colombo 2026” என்பது வெறும் சைக்கிள் சவாரி நிகழ்வாக மட்டும் அல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் தமது குரலை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக முன்னேற்றத்தில் பெண்கள் செயற்பாட்டாளர்களாக மாறி, மாற்றத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் வலிமையை உருவாக்குவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

மார்ச் 7 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் கலந்து கொண்டு ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தவுள்ளனர்.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பெண்கள் தினந்தோறும்  பாடசாலை, தொழில் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சைக்கிள்களில் செல்வதை காணலாம். எனினும் தெற்குப் பகுதிகளில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது அரிதாகவே காணப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பெண் குழந்தைகள் கல்வியில் முன்னேறும்போது, அவர்களுக்கு சைக்கிள் ஒன்றை பரிசளிப்பது உடல் வலிமையையும் மனத் தைரியத்தையும் வளர்க்க உதவும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.

சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியை மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, சுயநிறைவு மற்றும் சுதந்திர உணர்வை வளர்க்கும் ஒரு வழிமுறையாகவும் கருதப்படுகிறது.

கடந்த வருடம் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண Ride Colombo நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 250 பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த வருடம் இரண்டாவது தொடர்ச்சியான தடைவையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளஇந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பெண் சைக்கிளோட்டிகள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந் நிகழ்வில் கலந்துகொள்ள 350 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், விண்ணப்ப திகதியை மார்ச் 1ஆம் திகதிவரை நீடித்துள்ளதாகவும் கூறினர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 50 பெண் சைக்கிளோட்டிகளை பங்குபற்றச் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த பீல் ஸ்ரீலங்கா ஸ்தாபகர் மதுர தர்மரட்ன, அவர்களது சைக்கிள்களை கொண்டுவருவற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

பெண்களின் சமூக பங்குபற்றலை வலுப்படுத்தும் இந்த “Ride Colombo 2026” நிகழ்வு, சர்வதேச மகளிர் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடக சந்திப்பில் ரைட் கலம்போ நிகழ்ச்சி பணிப்பாளர் ப்ரவீன் ராஜபக்ஷ, பிக்கெய்ன் அணட் மெக்கேனிக்ஸ் ட்ரெய்னிங் கம்பனி பணிப்பாளர் ஹென்றியெட்டா கோல்போர்ன் (லுமாலா – பிரதான அனுசரணையாளர்), ரொட்டறியில் பெண்கள் – தலைவி மற்றும் இன்டர்நெஷனல் வெல்பீயிங் ஆலோசகர் ஆற்றுகைப்படுத்தல் உளவியாளர் ரசினி பண்டார, சினமன் சந்தைப்படுத்தல் பணிப்பாளளர் நாடியா இஸ்ஸதீன், பின்க் வீல்ஸ் அணி தலைவி தர்ஷி ஆரியரத்ன, மாயா ஹைவ் பிரதம நிறைவெற்று அதிகாரி மார்லன் இத்தமல்கொட, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதான தன்னார்வ தொண்டர் இசுரி ரணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.