இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை

10 0

இந்திய கடற்படையின் “நட்புப் பாலங்கள்” (Bridges of Friendship) திட்டத்தின் தொடர்ச்சியாக, பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி (INS Tarangini ) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறது.

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பலான INS Tarangini, 2026 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் தரித்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகக் கட்டத்தில் மற்றும் கடல் பயணக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

Commander Nitin Gajjar தலைமையில் வரும் இந்த பாய்மரக் கப்பல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற International Fleet Review 2026 நிகழ்வில் பங்கேற்ற பின்னர் திரும்பும் பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன இயந்திர மற்றும் வாயு டர்பைன் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்றைய காலகட்டத்தில், பாய்மரப் பயிற்சிக் கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்தியாவின் கடற்படையும் ஒன்றாக விளங்குகிறது.

INS Tarangini கப்பல் பிரபல யாட்ச் வடிவமைப்பாளர் Colin Mudie இனால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் Goa Shipyard Limited நிறுவனத்தில் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது.

சுமார் 54 மீற்றர் நீளமுடைய இந்த பாய்மரக் கப்பல், சுமார் 500 மெட்ரிக் தொன் இடப்பெயர்ச்சித் திறனைக் கொண்டுள்ளது. 20 பாய்மரங்கள் மற்றும் 10,000 சதுர அடிக்கும் அதிகமான பாய்மரப் பரப்பையும், 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுள்ள கயிறு அமைப்புகளையும் கொண்டுள்ளது.

மூன்று மாஸ்டுகளை கொண்ட பார்‌க் வகை பாய்மரப் பயிற்சிக் கப்பலான INS Tarangini, Indian Navy இன் முதல் பயிற்சிப் படையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

இந்த விஜயத்தின் போது, திருகோணமலையில் மூன்று அதிகாரிகளும் 25 இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளும் கடல் பயணப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தாலும், பாய்மரக் கப்பலில் பயிற்சி பெறுவது கடல், காற்று மற்றும் கடற்பயண அடிப்படைத் திறன்களை கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பாகும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.