வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பிப்.21-ல் கனமழை வாய்ப்பு!

12 0

தென் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 21-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து நாளை வலுவிழக்கக்கூடும்.

பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நாளை உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (பிப்.20) ஓரிரு இடங்களிலும், 21, 22 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 23 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை: 21-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களிலும், 22-ம் தேதி திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும், நாளை மறுதினம் குமரிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.