தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம் : அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம்

11 0

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் (Jetty) தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்வதற்கும் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, அமைச்சருடன் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

தலைமன்னார் இறங்குதுறையானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே நீண்டகாலமாக வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பைப் பேணி வந்த ஒரு முக்கிய தளமாகும்.

முன்னதாக இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே வாரத்திற்கு மூன்று முறை பயணிகள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்று வந்தபோதிலும், 1984ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக இந்தப் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

தற்போதுள்ள இறங்குதுறையின் கான்கிரீட் தூண்கள் மற்றும் உருக்குக் கட்டமைப்புகள் மிகவும் சிதைவடைந்து காணப்படுவதுடன், அதன் மரப்பலகை நடைபாதைகளும் பாவனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளன.

இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள புவியியல் ரீதியான முக்கியத்துவம் காரணமாக, தலைமன்னார் பிரதேசம் குறைந்த செலவில் பயணிகள் மற்றும் பொருட்களைப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு சிறந்த நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து ரயில் நிலையம் மிக அருகில் அமைந்துள்ளமையால், நாட்டிற்குள் சரக்குக் கையாளுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மிகவும் இலகுவாகவும் குறைந்த செலவிலும் முன்னெடுக்க முடியும்.

இலங்கை துறைமுக அதிகார சபையினூடாக இங்கு மீளவும் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் பாரிய பொருளாதார வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு இறங்குதுறையை பல கட்டங்களாக நவீனமயப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 310 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, பிரதான வீதியிலிருந்து கப்பல்கள் நங்கூரமிடும் பகுதி வரை பயணிகள் மற்றும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

அத்துடன், இரவு நேரப் போக்குவரத்துக்கான நவீன மின்விளக்கு வசதிகள், பயணிகள் முனையக் கட்டிடங்கள் மற்றும் வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அதன் தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் (Feasibility Study) தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.