திமுக – தேமுதிக கூட்டணி முதல் ‘ஆட்சியில் பங்கு’ விவகாரம் வரை: பிரேமலதா கூறியது என்ன?

12 0

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், அவர்களோடு நாங்களும் இணைந்திருப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானதை அடுத்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கான காரணம் குறித்து விளக்கி உள்ளார்.

அவர் தனது பேட்டியில், ‘‘முதல் முறையாக நாங்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 2011 முதல் 2026 வரை நாங்கள் அதிமுக கூட்டணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தோம். இது உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர், இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

திமுக – தேமுதிக கூட்டணிக்கு கருணாநிதியும் விஜயகாந்த்தும் பல முறை முயன்றார்கள். அவர்கள் பேசினார்கள். கடந்த 2016-ல் திமுக உடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பினார். கருணாநிதியும்கூட அப்போது, பழம் நழுவி பாலில் விழப் போகிறது என கூறினார். ஆனால், அது அப்போது நிகழவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது இப்போது நிகழ்ந்திருக்கிறது. எங்கள் கட்சியின் நிர்வாகிகளின் முடிவுதான் எனது முடிவு’’ என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமைப் பண்பு குறித்தும், திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், ‘‘மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார். அவர் தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதுபற்றித்தான் (ஆட்சிக்கு எதிரான மனநிலை) அதிகம் பேசுவார்கள். அவர் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார், என்னென்ன நிறைவேற்றவில்லை என்பது பெரிய கேள்வி. பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி இருக்கிறார். தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இது குறித்து நான் பலமுறை பேசி இருக்கிறேன்.