சீனாவோ, ரஷ்யாவோ அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று புதின் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ல் சீனா ரகசிய அணு ஆயுத சோதனையை நடத்தியதாக சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், விரிவான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்கு சீனாவும் ரஷ்யாவும் முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா ஏற்கெனவே மறுத்த நிலையில், தற்போது ரஷ்யாவும் மறுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், ‘‘ஒரு குறிப்பிட்ட சோதனை தொடர்பான செய்தி எங்கள் கவனத்துக்கு வந்தது. அந்த செய்தியில், சீனா மற்றும் ரஷ்யாவின் பெயர்கள் குறிப்பிடப்ப்டடுள்ளன.
ரஷ்யாவோ, சீனாவோ ரகசிய அணு ஆயுத சோதனை எதையும் மேற்கொள்ளவில்லை. இந்த குற்றச்சாட்டுக்களை சீன அரசு திட்டவட்டமாக மறுத்ததை நாங்கள் அறிவோம். எனவே, அதுதான் உண்மை’’ என்று கூறியுள்ளார்.
அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா – ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த 5-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும், அதில் சீனாவை இணைக்கவும் முடிவெடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இது தொடர்பாக இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் காலாவதியானதை அடுத்து, அணு ஆயுத போட்டிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சில நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், அவர்களின் கவலை மிகைப்படுத்தப்பட்டது என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

