கடன் வாங்கி ஊழல் செய்யவே பசுமையாக்கல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு

19 0

நிதியுதவி வாங்குவதற்காகவும், அதில் ஊழல் செய்வதற்காகவும் தான் காலநிலை மாற்றம் சார்ந்த பசுமைத் திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் ”தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026” என்ற கொள்கையை வெளியிட்டுள்ளார். எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல், பசுமையாக்கலுக்கான திட்டங்களும் இல்லாமல் கடன் வாங்கி ஊழல் செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இத்தகையத் திட்டங்களை அறிவிப்ப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை பசுமையாக்க வேண்டும் என்பதில் பாமகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான தொலைநோக்குப் பார்வையும், நகர்ப்புறங்களை பசுமையாக்குவதற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொண்டிருக்க வேண்டியதும் இந்த இலக்கை அடைய அவசியமானவையாகும். ஆனால், இந்தப் பணிகள் எதையும் திமுக அரசு இன்று வரை செய்யவில்லை.

எடுத்துக்காட்டாக, நகர்ப்புறங்களை பசுமையாக்க முதன்மைத் தேவை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும். அதற்குத் தேவையான மரங்கள் சட்டத்தை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என 2007ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. 2018ம் ஆண்டில் சென்னை – சேலம் அதி விரைவு பசுமைச் சாலை திட்டத்திற்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் இதை வலியுறுத்தியது.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு மரங்கள் சட்ட முன்வரைவு மீது முறையே 2022ம் ஆண்டு மே 26, 2022ம் ஆண்டு ஜூலை 14, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 10, 2022ம் ஆண்டு அக்டோபர் 27, 2023ம் ஆண்டு ஜனவரி 9, 2023ம் ஆண்டு ஜூன் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலப் பசுமைக் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதும், வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டதும் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பசுமைத் தாயகம் அமைப்பு பெற்ற தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று 2023ம் ஆண்டில் திமுக அரசு தெரிவித்தது. அது இன்னும் வெற்று அறிவிப்பாகவே நீடிக்கிறது.

அதேபோல், பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக மாவட்ட பசுமைக் குழுக்கள் 2021ம் ஆண்டில் அமைக்கப்பட்டன. இதன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அட்டவணை உருவாக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த மாவட்டத்திலும் மரங்கள் அட்டவணை உருவாக்கப்படவில்லை. மரங்கள் சட்டம் எப்போது உருவாக்கப்படும்? மாவட்ட அளவில் மரங்கள் அட்டவணை எப்போது உருவாக்கப்படும் ? என்பது பற்றி அரசின் கொள்கையில் எதுவும் இல்லை.

சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை 2030ம் ஆண்டுக்குள் 25% அதிகமாக்குவோம் என 2023ம் ஆண்டில் அறிவித்த முதல்வர் அதற்காக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. நகர்ப்புற சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து சதுப்பு நிலங்களையும் சட்டப்படி அறிவிக்கை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றமே 2024 டிசம்பர் மாதம் உத்தரவிட்டும் இதுவரை ஒரு சதுப்பு நிலத்தைக் கூட சட்டப்படி அறிவிக்கை செய்யவில்லை. இந்திய உயிரிப் பன்மய சட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் மக்கள் உயிரிப் பன்மை பதிவேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு நீதிமன்றத்தில் கூறியது.

ஆனால், ஒரு நகரிலும் அத்தகைய பதிவேடுகள் இல்லை. இது போல நகர்ப்புற பசுமையை அதிகரிப்பது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்கள், விதிகள், நீதிமன்ற உத்தரவுகளை செயலாக்குவதற்கான எந்த வழிகாட்டுதலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய கொள்கையில் இடம்பெறவே இல்லை.