வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது(காணொளி)

416 0

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீயை அவதானித்த அயலவர்கள் கூக்குரல் இட்டதன் காரணமாக தீ அணைக்கப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பல்பொருள் வியாபார நிலையத்தின் உரிமையாளர்,

நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் இரவு 11.00 மணிக்கு அயலவர்களின் கூக்குரல் கேட்டதைத் தொடர்ந்து கடைக்கு சென்று பார்த்தபோது வியாபார நிலையம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதாகவும் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வியாபார நிலையத்திற்கு தீ வைத்த விசமிகள் பெற்றோல் மற்றும் மண்ணண்ணை கலந்து கடைக்குள் ஊற்றிவிட்டு தீயிட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் கடையிலிருந்து சிறிது தூரத்தில் மது அருந்திவிட்டே அவர்கள் இந்த நாச வேலையை செய்திருப்பதாகவும் மதுப்போத்தல்களை அவ்விடத்தில் காணக்கூடியதாக உள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.