களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
அதிக மழை மற்றும் காற்று காரணமாக பதுரலிய டெல்கிட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரவில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ள நிலையில் குறித்த வீடுகளில் 11 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கொஸ்குலன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.புளத்சிங்கள பிரதேசத்தின் பரகொட ,கல்கெடிய , மோல்காவ , ஹல வெல்கம , யடகம்பிடிய , தியகடுவ , நாகஹதொல , குகுலேகல ,பாஹியன்கல வீதி மற்றும் கலவெல்லாவ போன்ற பிரதேசங்கள் 10அடி வரை நீரில் மூழ்கியுள்ளன.
தற்போதைய நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் படி திப்பொடுவாவை பிரதேசத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த வீடுகளில் இருந்த 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை ,மொரவக தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொபவக பிரதேசத்தில ்இரண்டு வீடுகள் மண்சரிவில் சிக்கியுள்ள நிலையில் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
யடகம்பிடிய நாயதொல லொக்கெவத்த பகுதியில் இரண்டு வீடுகள் மண்சரிவில் புதையுண்டுள்ள நிலையில் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
போகஹவத்த மஹகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நான்கு வீடுகள் புதையுண்டுள்ள நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஒருவர் காயமடைந்த நிலையில் புளத்சிங்கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெலவத்த நகர் முதல் கும்பதுவ வரை 4 அடி வரையில் நீர் தேங்கியுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பம்பருல்ல, வலல்லாவிட , பொல்கம்பல பிரதேசங்கள் தற்போதைய நிலையில் 4 அடி வரை நீரில் மூழ்கியுள்ளன.
மதுகம திக்பிடிய சந்தி இரண்டரை அடி வரை நீரில் மூழ்கியுள்ள நிலையில் மதுகம ஹொரணை வீதி குடலிகம பிரதேசத்தில் 8 அடி வரை நீரில் மூழ்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அலுத்கம மதுகம வீதியின் ஓவ்டிகல பிரதேசத்தில் மூன்று அடி வரை நீர் நிரம்பியுள்ளது.
இதேவேளை வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை மீட்கும் பணிக்காக 300க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ நிவாரணப்பணிகளுக்காக 150க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.
விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிக்காக விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேவையான பாதுகாப்பு படையினரை குறித்த பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக எம்.ஐ 17 ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் குறித்த பகுதி தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்காக தரையில் அல்லது நீரில் தரையிறக்கக்கூடிய விமானங்கள் இந்த மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதேபோல் இ 0112 343 970 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து மீட்புப்பணிகளுக்காக இராணுவத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் இ நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறப்பு அனர்த்த குழுவொன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது.
இந்த அனர்த்த நிலை காரணமாக பல்வேறு திடீர் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.