லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் இரண்டு சடலங்களை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர்.
திரீபோசா வாங்கச்சென்ற தாயையும் குழந்தையையும் காணவில்லையென உறவினர்களினால் 24.05.2017 மாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இன்று (25) காலை இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று காலை 10 மணியளிவில் தெப்பட்டன் தோட்டத்திலிருந்து தனது இரண்டு மாத ஆண் குழந்தையுடன் திரீபோசா பெறுவதற்காக கொத்தலனை சனசமூக நிலையத்திற்கு சென்ற தாய் நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லையென உறவினர்களினால் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
கணவர் கொழும்பில் பணி புரிவதாகவும், இரண்டு பிள்ளைகளின் தாயான 29 வயதுடை செல்வராஜ் சுசீலா என்ற பெண்ணையே குழந்தையுடன் காணவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேச மக்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் அதிகாலை 3 மணியளவில் சிசுவின் சடலத்தை மீட்ட பொலிஸார் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தாயை தேடும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் தாயின் சடலத்தையும் நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

