அமைச்சரவை அடுத்த வாரம் நிச்சயமாக மாற்றம் அடையும். அமைச்சரவையை மாற்றம் செய்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது உரித்தாகியுள்ள அமைச்சு பதவிகளை சுதந்திரக் கட்சியினர் பறித்தெடுப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை நிதி அமைச்சராக செயற்படுவதாயின் பூரண சுதந்திரம் வழங்க வேண்டும். எனக்கு நிதி அமைச்சு கிடைக்கபெறாது. நான் பதவி மோகம் கொண்டவன் அல்ல.தற்போது சிறந்த நிதி அமைச்சர் உள்ளார். அத்துடன் எந்த அமைச்சு மாற்றம் காணும் என்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமருமே அறிவர். தற்போதைக்கு வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவது நிச்சயமாகும். அடுத்த வாரமளவில் நிச்சயமாக அமைச்சரவை மாறும். அமைச்சரவை மாற்றம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது. எந்த அமைச்சு வேண்டுமானாலும் மாற்றம் அடையலாம். அது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மாத்திரமே தெரியும். இதற்கு முன்னரும் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றன. 1990 ஆம் ஆண்டு கூட அமைச்சரவை மாறியது.அதன் போது ரணசிங்க பிரேமதாச எனது தந்தையை அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.
அமைச்சரவை மாற்றம் நட்புறவின் பிரகாரமே முன்னெடுக்கப்படும். எனவே ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் நட்புறவுடன் அநீதி ஏற்படாமல் முன்னெடுப்பர். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எத்தனை அமைச்சு பதவிகள் உள்ளன.சுதந்திர கட்சிக்கு எத்தனை அமைச்சு பதவிகள் உள்ளன என்பதனை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
எனவே அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போதுள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படக் கூடாது. அதேபோன்று சுதந்திரக் கட்சிக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படகூடாது. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சு பதவிகளை சுதந்திரக் கட்சி பறிக்க கூடாது. அதேபோன்று சுதந்திரக் கட்சியின் அமைச்சு பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சி பறிக்க கூடாது. அமைச்சரவை மாற்றத்தின் போது ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய கட்சியை பலப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும்.
ஆகவே அமைச்சரவை மாற்றம் நீதியான முறையில் நடக்க வேண்டும். கட்சியின் கொள்கைக்கு மாறாக எம்மால் செயற்பட முடியாது என்றார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது,
கேள்வி: – உங்களுக்கு நிதி அமைச்சு கிடைக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையா?
பதில்: – நிதி அமைச்சு எனக்கா? இல்லை. நான் பதவி மோகம் பிடித்தவன் அல்ல. நிதி அமைச்சு என்பது சாதாரண விடயமல்ல. தற்போதை நெருக்கடியில் நிதி அமைச்சினை பெறாமல் இருப்பது சிறந்தது. அத்துடன் நிதி அமைச்சினை எனக்கு தந்தாலும் அதனை செயற்படுத்துவதற்கு பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியின் போது நிதி அமைச்சராக செயற்பட்ட சிறினால் டி மேல் சுதந்திரமாக செயற்பட்டார். எனினும் பிற்பட்ட காலப்பகுதியில் நிலைமை மாறியது. மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கஇ மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் நிதி அமைச்சை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அது தவறாகும். எனினும் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் அந்த நிலைமையை மாற்றி திறமையான நிதி அமைச்சர் ஒருவரை தெரிவு செய்துள்ளனர். ரவி கருணாநாயக்க அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் போது பல நெருக்கடிகள் இருந்தன. எனினும் தற்போது சாதகமான நிலைமைக்கு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளார்.
கேள்வி: – நிதி அமைச்சருக்கும் உங்களுக்கும் முரண்பாடு காணப்பட்டதே?
பதில்: – எமக்கு பிரச்சினை இருந்தது. கொள்கை ரீதியாக நாம் பிளவுப்பட்டோம். எனினும் அதனை நாம் அமைச்சரவைக்குள்ளே தீர்த்து கொண்டோம். அமைச்சரவையின் கூட்டு பொறுப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நாம் செயற்படவில்லை என்றார்.