திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடக்கம்

272 0

சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று தொடங்குகிறது. விழாவில், தமிழக முதல்-அமைச்சர், மத்திய மந்திரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.முன்னதாக நடக்கும் விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்டிரல் – பரங்கிமலை) மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கோயம்பேடு – பரங்கிமலை இடையேயும், விமான நிலையம் – சின்னமலை இடையேயும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கோயம்பேடுக்கு அடுத்துள்ள திருமங்கலத்தில் இருந்து எழும்பூருக்கு முன்னதாக உள்ள நேரு பூங்கா வரையுள்ள 7.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.

இந்த வழித்தடத்தில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைந்துள்ளன. இந்தப் பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.இதற்கான விழா, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, 7 சுரங்க ரெயில் நிலையங்களையும் திறந்து வைக்கின்றனர். இதில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மத்திய – மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை எடப்பாடி பழனிசாமி, வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். அப்போதே, 7 சுரங்க ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் சென்று மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதுவரை, பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வரை உயர்மட்டப்பாதையில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில், இனி நேரு பூங்கா வரை நீட்டிக்கப்படுகிறது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு திகில் அனுபவமாக இருக்கும். திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு 7½ நிமிடத்தில் வந்து சேர முடியும். முதற்கட்டமாக, 10 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரெயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.