பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களையும் சந்தித்தார் சிறீதரன்(காணொளி)

325 0

கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பெரியபரந்தன் பகுதியில் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட சுழல் காற்று மழையால் வீட்டுக்கூரைகள் தூக்கி வீசப்பட்டு வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சிறீதரன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சொந்தக்காணிகள் இன்றி குடும்பங்கள் வாழ்ந்து வருவதனால் இவர்களில் பலருக்கு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத நிலையில் குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். திடீர் என்று வீசிய மினி சூறாவளியினால் குடும்பங்கள் வாழ்விடபாதிப்புக்களை எதிர்நோக்கினர்.

இதனை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், குறித்த குடும்பங்களிற்கான காணி வழங்கல் மற்றும் வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் குறித்த மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கியுள்ளார்.

உதவிவழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் சுதர்சன், பெரியபரந்தன் கிராமசேவையாளர் செ.றஞ்சினி பெரியபரந்தன் வட்டார அமைப்பாளர் சு.யதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.