குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது: விஜயதாச ராஜபக்ஷ

223 0

எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் விஜயதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு முன்வைக்கும் காரணிகள் நியாயமான காரணிகளாகும்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அகதியாக்கப்பட்ட மக்கள் மீண்டும் சொந்த பகுதியில் குடியமர்த்தப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிதல், ஏனைய யுத்த குற்றங்கள் தொடர்பில் சரியான வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என தமிழர் தரப்பு முன்வைக்கும் காரணிகள் நிராகரிக்க முடியாது ஏற்றுகொள்ளகூடிய விடயங்களாகும்.

யுத்தத்தின் பின்னர் தொடர்ச்சியாக இந்த காரணிகள் முன்வைக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் முன்னைய ஆட்சியில் நல்லிணக்கம் மற்றும் மீள் குடியேற்ற நகர்வுகள் கவனத்தில் கொள்ளப்படாத நிலைமையில் சர்வதேச அழுத்தம் பலமடைய ஆரம்பித்தது.

எனினும் நாம் ஆட்சியிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை பலமான முன்னெடுத்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

படைகளின் வசம் இருந்த பொதுமக்களின் காணிகள் பெரும்பாலும் விடுவிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் நல்லிணக்கத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் மறுபுறம் புலம்பெயர் அமைப்புகள் நாட்டில் சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஒரு தரப்பினர் சர்வதேச தலையீடுகள், கலப்பு விசாரணை பொறிமுறை என்பன தொடர்பில் கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த சர்வதேச தரப்பு அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன. ஆனால் அந்த காரணிகளுக்கு ஒருபோதும் எம்மால் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.