ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்

267 0

சென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 ரெயில் நிலையங் களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 ரெயில் நிலையங் களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

கொலை, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமீப காலங்களாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி. நிறுவனங்கள் உள்பட பெரிய நிறுவனங்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலையில் குற்றவாளியை பிடிப்பதற்கு ரெயில் நிலையத்துக்கு நேர் எதிரே உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா தான் முக்கிய பங்கை வகித்தது. அந்த சமயத்தில் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதைத்தொடர்ந்து பயணிகள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள் மற்றும் பதற்றமான ரெயில் நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையே மனுவாக கருதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையில், தெற்கு ரெயில்வே சார்பில் மண்டல முதுநிலை பாதுகாப்பு கமிஷனர் கே.கே.அஷ்ரப் பதில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘சென்னை ரெயில்வே கோட்டத்தை பொறுத்தவரையில், 158 ரெயில் நிலையங்களில் 10 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 82 ரெயில் நிலையங்களில் விரைவில் கேமராக்கள் பொருத்தப்படும்’ என்று தெரிவித்து இருந்தார்.

இது குறித்து மண்டல முதுநிலை பாதுகாப்பு கமிஷனர் கே.கே.அஷ்ரப்பிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சென்னை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட 82 ரெயில் நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ் ரூ.54 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் சுமார் 16 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் மொத்தம் 1,300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதைத்தொடர்ந்து மற்ற ரெயில் நிலையங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.