ஏனைய பிரச்சினைகளில் அக்கறைகாட்டும் அரசாங்கம், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையிலும் முழு மூச்சுடன் அக்கறைகாட்ட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

278 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 80 ஆவது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி 80 நாட்களாக போராடிவரும் தமது நிலை தொடர்பில், முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது போராட்டத்தினை தொடர்ந்து தமது தொழில் நியமனங்களுக்கான ஆளணி அனுமதி கிடைத்துள்ள போதிலும் இது வரையில் திறைசேரி அனுமதி வழங்கவில்லை எனவும், தமது பிரச்சினை தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் கரிசனையுடன் செயற்படும் போதே பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் போராட்ட இடத்திற்கு விஜயம் செய்த பிரதமரின் ஆலோசகர்கள் ஓரு மாத கால அவகாசம் கோரியிருந்ததாகவும், ஆனால் கால அவகாசம் ஒரு மாத காலத்தினை தாண்டியுள்ள நிலையிலும் இது வரையில் உறுதியான பதில்கள் வழங்கப்படவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு உறுதியான நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்திருந்தால், அது தொடர்பில் உறுதிமொழியை வழங்குவதற்கு ஏன் அரசாங்கம் தயக்கம் காட்;டுகின்றது எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.