அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த 50 காவல்துறை அதிகாரிகளை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையில் இருந்து 50 பேரை நேற்றிலிருந்து குறைக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.