அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத் தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினை அவமதித்தார் என்ற காரணத்தினாலேயே அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேல் நீதிமன்றம் சைட்டம் தனியார் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களை ஏற்றுக்கொண்டு அவர்கள்கு வைத்தியப்பட்டம் பெற அனுமதி வழங்க வேண்டும் என தீர்பளித்திருந்தது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய சைட்டம் தனியார் கல்வி நிலைய விவகாரத்தில் வெளியிடும் கருத்துக்கள் முழுமையாக நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக அமைந்துள்ளது. அதனால் அவருக்கு உரிய தண்டனைகளை சட்டத்தின் பிரகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று தாக்கல் செய்துள்ள மனு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினை சேர்ந்த பேராசிரியர் சரத் விஜேசூரிய, பிரஜைகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட ஆகியோர் குறித்த மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தனர். இதில் பிரதிவாதியாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது மனுதார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மேற்படி விவகாரம் குறித்து மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டபோது இவ்வழக்கின் பிரதிவாதி நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளதாக மன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்தே பாதெனியவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.