பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது

283 0

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானில் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இந்து வாலிபர் பிரகாஷ்குமார் (35). இவர் மண் பாண்டங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

இவர் மத அவமதிப்பு கருத்துக்களை ‘வாட்ஸ்அப்’பில் பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த பொதுமக்கள் கும்பலாக திரண்டு பலூசிஸ்தானில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அவரை வெளியே இழுத்து வந்து கொலை செய்ய தயாராக நின்றனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து கும்பலிடம் இருந்து பிரகாஷ்குமாரை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இருந்தும் அக்கும்பல் விடவில்லை.

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீசி தாக்கினர். அதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அத்துடன் கும்பல் விடவில்லை. ரோடுகளில் டயர்களை தீயிட்டு கொளுத்தியும், கல்வீசியும் கலவரத்தில் ஈடுபட்டது. எனவே பலுசிஸ்தானில் கடைகள் அடைக்கப்பட்டன.

இதற்கிடையே வாலிபர் பிரகாஷ்குமார் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு கருதி அவர் கதானி சிறையில் அடைக்கப்பட்டார்.