ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி

235 0

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமான் மாவட்டத்துக்குட்பட்ட காலி லுக்மான் மற்றும் காலி ஜஹாங்கிர் ஆகிய இடங்களில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி முகாம்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் முகாம்களில் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் ஆவேச தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.