முஸ்லிம்களின் தாடிக்கும், தொப்பிக்கும் வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை-நாமல் ராஜபக்ஷ

231 0

முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி அரசு வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ;
முஸ்லிம்களின் வாக்குளை கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி இன்று அவர்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துள்ளது. என்றும் இல்லாதவாறு இன்று ஹஜ்ஜுக்கு செல்பவர்களிடம் 25000 பதிவுக்கட்டணம் அறவிடப்படுகிறது.

இனவாதிகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமெனப் பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவைகள்அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு அரச அங்கீகாரம் பெற்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

நோன்பு மாதம் வருவதை அறிந்து இவ்வரசு பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனை இவ்வாட்சியாளர்களுக்குத் தெரியாமல் யாராலும் செய்ய முடியாது. இவ்விடயமானது இந்த அரசு முஸ்லிம்களைப் புறந்தள்ளி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் பேரீச்சம் பழத்தை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு இவ்வரசு உதவிசெய்யும் பொருட்டு அதன் விலையைக் குறைத்து வழங்க வேண்டும். நாம் எமது காலத்தில் அவ்வாறுதான் செய்தோம். அனைத்து முஸ்லிம்களும் அவர்களுக்கு தேவையானளவு பேரீச்சம் பழத்தை கொள்வனவு செய்வதை இவ்வரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் இலங்கை அரசு பேரீச்சம் பழத்தின் வரியை அதிகரித்துள்ளமையானது எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஆட்சியில் சில இனவாத செயற்பாடுகள் தலைதூக்கிய போது மௌனமாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இப்போதும் மௌனமாக இருப்பது வேடிக்கையானது. இந்த நேரத்தில் நீங்களாவது பேசுங்கள் என எமது முஸ்லிம் சகோதரர்கள் எம்மிடம் கோரிக்கை முன்வைக்கிறார்கள் .

மஹிந்த பட்ட கடனை செலுத்தவே பேரீத்தம் பழத்துக்கு வரி அதிகரிப்பதாகக் கூறி முஸ்லிம்களை மேலும் முட்டாள்களாக்க வாய்ப்புள்ளது எனவும் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி வரிஅறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவுன் அவர் மேலும் குறிப்பிட்டார்