பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு

205 0

மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே கருத்து வெளியிடுகையில், பல துறை சார்ந்த சேவைகள் இதனூடாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களும் இதர சுகாதார பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போது அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராக இருப்பதாக மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இதேவேளை பணிப்புறக்கணிப்பு காரணமாக மருந்து வழங்கல் உள்ளிட்ட இதர பணிகள் பாதிக்கப்பட்டால் அந்த நடவடிக்கைகளை அரச மருந்தகங்களின் ஊடாகவே வேறு மாற்று வழிகளின் ஊடாகவே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புகையிரத திணைக்களத்தின் இரண்டு தரங்களைக் கொண்ட அதிகாரிகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் பொறியியல் புகையிரத செலுத்துனர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 8 மணி தொடக்கம் சில புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

எனினும், புகையிரத போக்குவரத்து சேவையில் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் இன்றி போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று அழைக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு தாம் இணைந்து கொள்ளவில்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையைச் சார்ந்த அகில இலங்கை போக்குவரத்து சங்கமும் இன்றைய போராட்டத்தில் இணைய வில்லை என அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாலபே சயிட்டம் நிறுவனத்திற்கு தாமும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதன்படி சயிட்டம் விரோத செயற்பாடுகளில் எதிர்காலத்தில் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.