விடுதிக்கல் கிராமத்தில் குப்பை போடுவதற்கு எதிர்ப்பு

258 0

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கிராமவாசிகள், உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்பட்ட குப்பையை அவ்விடத்தில் போடுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், குப்பையுடன் வந்த 2 உழவு இயந்திரங்களும் பிரதேச சபைக்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் திருப்பி அனுப்பப்பட்டன.    மேற்படி குப்பை மேட்டில் திங்கட்கிழமை (1) மாலை திடீரெனத் தீ பரவியமை காரணமாக அங்கு புகை மூட்டமாகக் காணப்பட்டதுடன், பொதுமக்களுக்கு சுவாசிக்க முடியாத நிலைமை காணப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இந்தக் குப்பை மேட்டில் தீ  பரவியமை தொடர்பில் மேற்படி  பிரதேச சபை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், நீர்ப்பம்பி இயங்காமையால், உரிய வேளையில்; தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள்; கூறினர். இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளர் ஜோன்பிள்ளை குமுதா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில், ‘இந்தக் குப்பைமேடு அமைந்திருக்கும் இடம் பண்ணை அமைப்பதற்கெனக் கூறி, ஒரு வருடம் அவ்விடத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவ்விடம்  குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களும் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். இனிமேலும் இவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை’ என்றனர்.

இதற்குப் பதிலளித்த பிரதேச சபைச் செயலாளர் ‘2011ஆம் ஆண்டு இவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு பிரதேச செயலகத்தால் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையிலேயே, இவ்விடத்தில் குப்பை கொட்டப்படுகின்றது. மேலும், கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றது. குப்பையை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான வேலைத்திட்டம் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.