ஆறுமுகனுக்கு அமைச்சுப் பதவி-மஹிந்த அமரவீர

217 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஆறுமுகன் தொண்டமானை ஒருபோதும் கைவிடாது. எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும், சு.க, இ.தொ.காவுடன் கை கோர்த்தே செயற்படும்” என, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“எதிர்வரும் காலங்களில், ஆறுமுகன் தொண்டமானுக்கு சு.க.வினூடாக சிறந்த அமைச்சுப் பதவி வழங்கப்படும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.   இ.தொ.காவின் மே தினக் கூட்டம், கினிகத்ஹேன பிரதான பஸ்தரிப்பு நிலையத்துக்கருகில், காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,   “2020ஆம் ஆண்டு, இந்நாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, புதிய தனி ஆட்சியினை அமைக்கும். இந்த நாட்டில் எத்தனை அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், சு.க.வுடன் தான் ஆறுமுகன் தொண்டமான் இருப்பார். நாம் ஆறுமுகத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். ஆறுமுகமுன் எம்மை கைவிடமாட்டார் என்பது உறுதி.

2020ஆம் ஆண்டில் தனி ஆட்சி அமையும்போது, மலையகத்தைப் பிரதநிதித்துவம் செய்யக்கூடிய முக்கிய அமைச்சை, அமைச்சரவை அந்தஸ்துடன் வழங்க சு.க தயாராக உள்ளது. இ.தொ.காவை விட சிறந்தக் கட்சி, மலையக மக்களுக்கு வேறு ஏதும் இல்லை. எனவே, மலையக மக்களின் எதிர்கால வாழ்க்கை, சுபீட்ஷம் அடைய சு.க ஒருபோதும் பின்வாங்காது. நாம் இ.தொ.காவை ஆதரிப்போம்” என்றார்.