பொருளாதார மத்திய நிலையம் நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்

372 0

Wigneswaran-1வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையவுள்ள நிலையில் எங்கு எவ்வாறான மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடக்கு முதலமைச்சரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாங்குளத்தில் கடலுணவுப் பொருட்கள் தொடர்பான சந்தையும் வவுனியா மதகு வைத்த குளத்தில் மரக்கறிச் சந்தையும் நிறுவப்படும் எனப் பரவிய செய்தியையடுத்து மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இறுதியாக எந்தவொரு தீர்மானமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இந்த விடயம் தொடர்பாக பொருளியல் நிபுணர்களிடமும் ஆய்வாளர்களிடமுமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே எங்கே எந்தச் சந்தை அமைக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்படும் எனவும், இதையிட்டு மக்களை குழம்பவேண்டாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.