வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த தடையுத்தரவானது 28ஆம் திகதியிடப்பட்டு யாழ். மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தடையுத்தரவின் பிரகாரம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கியூ.உபுள் ரோகண, செயலாளர் கே.ஏ. சிறிபால மற்றும் யாழ். தலைவர் ஜீ.சதீஸ் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரான வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவை மீறுபவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்க உள்ளாக நேரிடும் என்றும் அந்த தடையுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், 28ஆம் திகதி தொடக்கம் வெளிக்கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கை குறித்து பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட இடமாற்றப் பட்டியல், தாபன விதிக்கோவைகளுக்கு முரணானது எனக் கூறிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். அத்துடன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கடந்த டிசெம்பர் மாதம் முதல், ஜனவரி 10 திகதி வரை 22 நாட்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தொழிற்சங்கத்தினர் – மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.