மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் 10 வருடங்களின் பின்னர் தமது சொந்த மண்ணிற்கு…(காணொளி)

288 0

 

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று காலை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராம மக்கள் இன்று தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணியளவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்தில் நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தலைமையில், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தை சுகீன் அடிகளார் ஆகியோர் இணைந்து இத்திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

பின்னர் திருப்பலி நிறைவடைந்த நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த நிலங்களை பார்வையிட்டனர்.

மேலும் முள்ளிக்குளம் மக்கள் அனைவரும் ஒன்றாக சமைத்து உணவு உண்டு தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

கடற்படையினர் முதற்கட்டமாக 100 ஏக்கர் காணியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் சில தினங்களில் குழு ஒன்றை அமைத்து மக்கள் கடலுக்குச் சென்றுவரும் பாதை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை, கடற்படையூடாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், முள்ளிக்குளம் கிராமத்திற்கு வந்துள்ள மக்கள் ஆலயத்தில் தங்கியிருந்து கட்டம் கட்டமாக தற்காலிக வீடுகளை அமைத்த பின் தமது இடங்களுக்குச் செல்வார்கள் எனவும் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.

முள்ளிக்குளம் மக்கள் இன்று 10 வருடங்களின் பின் மீண்டும் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், குறித்த மக்களை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் கெனடி உட்பட பலர் சென்று குறித்த மக்களுடன் கலந்துரையாடி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி பலவந்தமாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும்; குறித்த காணிகள் விடுவிக்கப்படாத நிலை காணப்பட்டது.

-இந்நிலையில் முள்ளிக்குளம் மக்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு முன் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையிலே தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டு வந்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, அப்பகுதி மக்களின் 38ஆவது நாள் போராட்டமான நேற்று முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.