தொழிலாளர் தினமான நாளையை தினத்தை, துக்கதினமாக அனுஸ்டிக்கப் போவதாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று 54ஆவது நாளாக வீதி ஓரத்தில் போராடி வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் தமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில், இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்டிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் உரிமைகளைக் கோரி நடாத்தப்படுகின்ற தொழிலாளர் தினத்தில், தொழில் புரியும் தமது உழைக்கும் வர்க்கமான கணவன் மற்றும் உறவுகளையே தொலைத்துள்ள தாம் என்ன உரிமைகளை கோருவது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.