குப்பை பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம்

248 0

நாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளது. ஆகவே நாட்டு வளங்களை விற்பனை செய்தாவது ஆட்சியை கொண்டு நடத்தவதற்கு அரசாங்கம் முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு  பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் தற்போது குப்பை விடயம் தொடர்பில் பீதியடைந்தள்ளனர். எனவே நல்லாட்சி அரசாங்கம் குப்பை பிரச்சினைக்குக்கூட தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும் அப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கும்போது சமயத் தலைவர்கள் மற்றும் மக்களினதும் ஆலோசனைக்கமைவாக தீர்வு காணவேண்டும். அதனைவிடுத்து சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முனையக்கூடாது.

அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை கைச்சாத்திட முனைந்தது. அதற்கெதிராக கூட்டு எதிர்க்கட்சி தொடர்ச்சியாக எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தது. அதனால் இதுவரையில் அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடமுடியாத நிலையில் உள்ளது. எனினும் நாட்டு வளங்களை எவ்வாறாவது விற்பனை செய்தாவது ஆட்சி நடத்துவதற்கே அரசாங்கம் முற்படுகிறது என்றார்.