வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில், பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை, லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அப்பகுதி உத்தியோகத்தர் ஒருவர், இராசபுரம் என்னும் தமிழ் மக்களின் பூர்வீக கிராமம், லைக்கா ஞானம் கிராமம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்களை மீள்குடியேற்றுவதற்காக வீட்டுத்திட்டம் வழங்குவது நல்ல விடயமாக இருக்கின்ற போதும், ஒரு பாராம்பரிய பழமையான கிராமத்தின் பெயரான இராசபுரம் என்பதை மறைத்து, லைக்கா ஞானம் கிராமம் என மாற்றுவது எமது வரலாற்றை மாற்றுவதாக அமைந்து விடும் என, ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதன்போது அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புராதன கிராமங்களின் பெயர்கள் அந்தக் கிராமங்களின் அடையாளங்களாகவும், ஏதோவொரு வகையில் அந்த கிராமத்தவர்களுடன் தொடர்புபட்டதாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே அந்த அடையாளங்களை நாம் மாற்ற முடியாது. அது தொடர்பில் உடனடியாக பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதனை வட மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் வலியுறுத்தினர். அத்துடன் இதற்கு இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான் ஆதரவு வழங்கினார்.
இதனையடுத்து பதிலளித்த வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர் க.சத்தியசீலன், கிராமத்தின் பெயரை மாற்றி வீதிப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் எம்மிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தால் அதனை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கிராமத்தின் பெயரை மாற்ற முடியாது எனவும், அது இராசபுரம் கிராமம் என்றே தொடர்ந்தும் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், உடனடியாக புதிதாக பெயர் மாற்றி அமைக்கப்பட்ட வீதிப் பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

