அமைச்சரின் வாகனம் மோதியதில் கர்ப்பவதி உட்பட்ட நால்வர் காயம்!

331 0

கெப் ரக வாகனமொன்று, மோட்டார் சைக்கியொன்றை மோதியதில், கர்ப்பவதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் மகன் உள்ளிட்ட குழுவினர் பயணித்த கெப் ரக வாகனமே, குறித்த குடும்பத்தார் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியுள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தளம், ஆனமடுவ மஹஉஸ்வெவ ஏரிக்கருகில் 1 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இகினிமிபிட்டிய பலுகொல்ல வீதியில் நேற்றுத் திங்கட்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த தந்தை, 6 மாதங்க​ளையுடைய கர்ப்பிணித்தாய் மற்றும் பிள்ளைகள் இருவர் உள்ளிட்ட நால்வரையும் ஆணமடுவ வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், இரு சிறுவர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

7 வயதுடைய ஹிருணிகா சத்சர மற்றும் 4 வயதுடைய கயந்த இந்துனில் என்ற சிறுவர்களே, படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்விபத்துத் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அனுஷ்க பிரியதர்ஷன என்பவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.