மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம் ஆகியோருடன் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.லோறன்ஸ், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
போகாவத்தை தோட்டத்தில் வீடுகள் அற்ற 60 குடும்பங்களுக்கு புதிய தனி வீடுகளை அமைச்சின் மூலம் அமைத்துக்கொடுக்கும் முகமாகவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம்,
கடந்த அரசாங்கத்தில் கறுப்பு வான், வெள்ளை வான் என தொல்லைகள் தந்தது.
ஆனால் இந்த அரசாங்கத்தில் அத்தகைய தொல்லைகள் இல்லை.
மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றேன்.
நாடு கடன் சுமையை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இந்த கடன் சுமையிலிருந்து மீள்வதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த ஆண்டில் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னோக்கி செல்கின்றது.
இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் மக்கள் அனைவருமே ஒற்றுமையுடன் வாக்களித்துள்ளனர்.
நமது நாட்டில் இன, மொழி, மத வேறுபாடு இல்லாமல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அனைவருமே முன்னெடுக்கப்பட வேண்டும்.
நான் தமிழ் மற்றும் சிங்கள, மூஸ்லிம் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றவன்.
எனக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் இல்லை.
எனது அம்மா, அப்பா நான் பிறந்த இடத்தில் மூவினத்தினருடனும் நண்பராகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
அதேபோலவே நானும் வாழ்ந்து வருகின்றேன்.
கிராம பகுதிக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் கிராம பகுதிகளில் எத்தகைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என முயற்சித்தாலும் கிராம பகுதிகளை நாம் அபிவிருத்தி செய்து கொள்கின்றோம் என சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை இடுகின்றனர்.
ஆனால் கிராம பகுதிக்கு அபிவிருத்தி பணிகள் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
அதேவேளையில் அரசாங்கம் எனக்கு தோட்டபகுதிகளுக்கே அபிவிருத்தி பணிகளை செய்தவதற்கான வாய்ப்பை தந்துள்ளது.
இந்த நிலை எனக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கின்றது.
ஆனால் எதிர்வரும் காலத்தில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிராம பகுதிக்கும் அபிவிருத்தி பணிகளை செய்ய வாய்ப்பை பெறுவேன்.
இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.
அடுத்த வருடம் நாட்டின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை செய்து முடிப்பதை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது.
என பி.திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.