மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 62ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமது தொழிலுரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரி, இரவு பகலாக வீதியில் படுத்துறங்கி மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கம் பட்டதாரிகள் தொடர்பில் விடுத்துவரும் முரண்பாடான கருத்துகள் தமக்கு மனவேதனையளிப்பதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.
தமது போராட்டத்தின் ஒரு அம்சமாக, பட்டதாரிகளுக்கு பரீட்சை வைக்காமல் நேர்முகத் தேர்வினை நடாத்தி அரச சேவைகளில் உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள், எனினும் அதற்குமாறாக 20ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு பரீட்சை நடாத்தவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதனை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், பட்டதாரிகளை நேர்முகத் தேர்வினை நடாத்தி அரச சேவையில் உள்ளீர்க்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது நியாயமான போராட்டத்தினை மனப்பூர்வமாக உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

