மாலபே தனியார் கல்லூரியை பகுதியளவில் அரச உடமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் உடன்படப் போவதில்லை. மேலும் குறித்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளால் அரச பல்கலைகழக மாணவர் கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்றைய தினம் நுகேகொடையில் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளோம் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.
மருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,மாலபே தனியார் பல்கலைக்கழகமானது ஆரம்பத்தில் போதனா வைத்தியசாலையாக இயங்கும் என தெரிவித்தே ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பிற்காலத்தில் இலவச கல்வியை விற்பனை செய்யும் நிலையமாகவே இதன் செயற்பாடுகள் அமைந்ததோடு போதனா வைத்தியசாலையாகவும் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது குறித்த தனியார் பல்கலைக்கழகத்தினை பகுதியளவில் அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குறித்த தனியார் பல்கலைக்கழகத்தை அரச உடமையாக்குவதற்கு முன்னர் அதில் இடம்பெற்ற மோசடி குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
மேலும் இவ்வாறான தவறான திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் மக்களுக்கான சுகாதார சேவையின் பாதுகாப்பினை அரசாங்கம் உறுதிப்படுத்த தவறியுள்ளது. இச்செயற்பாடுகளை கண்டித்து இன்றைய தினம் (புதன்கிழமை) நுகேகொடையில் எதிர்ப்பு பேரணியையொன்றை நடத்தவுள்ளோம்.
இப்பேரணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள்,ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.