நீண்ட காலமாக மரத்தில் கட்டி வைக்கப்பட்ட இரு சிறுவர்கள் மீட்பு

273 0

கதிர்காமம், நாகஹவீதிய யால வனப் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றிலும் கொங்கிரீட் கம்பம் ஒன்றிலும் நீண்ட காலமாக கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அப்பிரதேசத்திலுள்ள கப்புகம சரணதிஸ்ஸ என்ற தலைமை பிக்குவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கதிர்காமம் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதிக்கு சென்று குறித்த இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

09 வயதுடைய சிறுவன் கொங்கிரீட் கம்பத்திலும், 17 வயதுடைய சிறுமி மரம் ஒன்றிலும் கட்டப்படிருந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த சிறுவர்களின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில், தாய் அங்கவீனமடைந்த பிள்ளையுடன் கதிர்காமம் வழிபாட்டு பிரதேசத்தில் பிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த இரு சிறுவர்களையும் இவ்வாறு கட்டி வைத்து விட்டு, மற்ற பிள்ளையுடன் தாய் பிச்சை எடுத்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மாலை வேளையில் குடிபோதையில் வரும் தாய் இரண்டு பிள்ளைகைளயும் அடிப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தாய் மற்றும் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.