அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது

236 0

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு புதிய அரசியலமைப்பு குறித்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல மக்களின் பிரதிநிதித்துவமும் பலமடையும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும்.

பிரதான இரண்டு கட்சிகளும் தனித்தனியாக ஆட்சியை நடத்திய போதிலும் அதேபோல் இப்போது இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டு ஆட்சியை முன்னெடுத்து வரும் நிலையிலும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை.

இப்போது புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு நாட்டின் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டும்.

மாறாக பிரச்சினைகளை பெரிதாக்கி மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது. நாட்டின் தேசிய பிரச்சினைகளை சரியான வகையில் கையாள வேண்டும். சிறுபான்மை இனங்களை பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.