மோடியின் வருகைக்கு முன்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம்

238 0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 151 இந்திய மீனவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை விடுவிக்குமாறு இந்திய மீனவர்கள் தரப்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இதற்கு முன்னதாக குறித்த படகுகளை விடுவிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவித்தால், மீண்டும் அவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது அதிகரிக்கும் என்று வடக்கு மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் குறித்த படகுகளை விடுவிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அண்மையில் கடற்றொழில் துறை அமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.