அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம் மாவட்டச் செயலக கூட்டத்தில் குற்றசாட்டு

247 0
கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வனவளத் திணைக்களத்தின் மாவட்ட பொறுபதிகாரியை கடிந்துகொண்டார். படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு கூட்டத்தின் பின்னர் வனவளத்திணைக்கள அதிகாரிக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையில் வாக்குவாதமும் இடம்பெற்றது.
அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத்திணைக்களத்திற்குரிய காணி என்று அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை பெறவேண்டும் என்பதோடு, தங்களின் நடைமுறைக்கு அமைவாகவே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வனவளத்திணைக்கள அதிகாரி கூறியிருந்தார்.
ஆனால் 1992 ஆம் ஆண்டு 58 இலக்க தத்துவ உரிமம் மாற்றம் சட்டத்திற்கு அமைவாக அரச காணிக்கான அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது அதன்படி செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது வனவளத் திணைக்களம் தடையாக இருக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது
ஆனால் வனவளத் திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி 5ஃ2001 சுற்று நிரூபத்திற்கு அமைவாக அனைத்து அரச காடுகளும், மற்றும் எதிர்காலத்தில் வனமாக மாறக் கூடிய  நிலங்களும் வனவளத்திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே அதன்படியே நாங்கள் செயற்படுகின்றோம். 2009 வன திருத்தப்பட்ட சட்டத்தின் படி காடு என்பது தனியே மரங்களை கொண்ட பிரதேசங்கள் மட்டுமல்ல காடு என்பதற்கு அச் சட்டத்தில் தனியான வரைவிலக்கனம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே நாங்களும் எங்களது சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே பணிகளை மேற்கொள்கின்றோம் எனத்  தெரிவித்தார்
இந்த நிலையில் குறித்த அதிகாரி மீது சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ. சுமந்திரன் மாவட்ட அரச அதிபருக்கு அறிவுறுத்தினார்.