விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பெரிய வெங்காயம்!

226 0

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய ஆயிரத்து 880 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்திரவிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் விசாரணை நடத்தியுள்ளது.

அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் கொள்வனவு செய்த டொன் கணக்கான பெரிய வெங்காயத்தை களஞ்சியப்படுத்த முடியாது அவை பழுதடைந்து போனதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கான பணம் நிதியமைச்சின் முன்னாள் செயலாளரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 60 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு பீ.பி. ஜயசுந்தர உத்தரவிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகளவான விவசாயிகள் தமது பெரிய வெங்காய உற்பத்தியை அரசாங்கத்திற்கு விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளை பெற அவர்களின் மன கவரும் வகையில் அதிக விலைக்கு வெங்காயம் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 10 மணிக்கு ஆஜரான பீ.பி. ஜயசுந்தரவிடம் பிற்பகல் 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.