மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள், தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்ககோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரத கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்கக் கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவைப் பாதுகாவலாளிகளின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்காப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக ஆறு மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ரயில் கடவைப் பாதுகாவலாளிகளாக நியமனங்களைப் பெற்றுக்கொண்ட தாங்கள் கடந்த நான்கு வருடங்களாக கடமையாற்றி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
மாதாந்தம் 7,500 ரூபாய் சம்பளமே தங்களுக்கு வழங்கப்படுவதுடன் 30 நாட்கள் வேலைக்கு சென்றால் மட்டுமே இந்தச் சம்பளம் வழங்கப்படுவதாகவும் இந்தச் சம்பளத்தை வைத்தே தங்களது குடும்பங்களின் வாழ்க்கைச் கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தாங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற போதிலும் தங்களின் நிலைமை தொடர்பில் மாவட்ட அரசியல்வாதிகள் பாராமுகமாகவே இருந்து வருவதாகவும்
இந்த நல்லாட்சி அரசாங்கமாவது தங்களது நிலைமையை உணர்ந்து தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.

