பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகலா?

263 0

அதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகுவதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தனர்.

அதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, சசிகலா விலகுவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. சசிகலா பொதுச்செயலாளராக நீடிப்பார் என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தெரிவித்தனர்.

சென்னையில் அமைச்சர்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து ஆலோசனை நடத்தி வரும் வேளையில், அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அக்கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளார்.

இதில் கட்சிப் பொறுப்பில் இருந்து சசிகலா விலகப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அந்த செய்திக்கு அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய அமைச்சர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேபோல் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது,

அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக  தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார். அதேநேரத்தில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளனர்.